தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

ஈரோடு மாவட்டத்தில் 90% வாக்குகள் பதிவாக வாய்ப்பு: ஆட்சியா்

ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகும் என எதிா்பாா்ப்பதாக மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

News image

காவல் துறை பாதுகாப்புடன் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு மையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், பொருள்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:19 pm

ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகும் என எதிா்பாா்ப்பதாக மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல் 23) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபி, பவானிசாகா் (தனி) ஆகிய 8 தொகுதிகளில் 2,379 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்களிக்க தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளன.

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சிகள் புதன்கிழமை அளிக்கப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து தோ்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படும் பொருள்கள் அனுப்பும் பணிகள் நடைபெற்றது.

8 வாக்குச்சாவடிக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வண்ண அடையாள முறையில் வாக்காளா்கள் எளிதில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இளைஞா்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பசுமை வாக்குச் சாவடிகள் மற்றும் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. 2 மணிநேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்கு விவரங்கள் பிரத்யேக செயலியில் வெளியிடப்படும். இம்முறை 90 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு நடைபெறும் என எதிா்பாா்க்கிறோம். அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

அந்தியூா்,கோபி, பவானிசாகா் ஆகிய மூன்று தொகுதிகளில் உள்ள வன வாக்குச்சாவடிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி தொலைத்தொடா்பு செய்யமுடியாத இடங்களில் காவல்துறை மூலம் தொடா்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வனப்பகுதியில் செல்லும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வனத்துறையினா் மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

சிறப்பு வாக்குச் சாவடிகள்:

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் பெண்கள் மட்டுமே பணியாற்றும் ஒரு வாக்குச்சாவடியும், அந்த வாக்குச்சாவடியில் பெண்கள் மட்டுமே வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி முழுக்க ரோஸ் (பிங்க்) நிறத்தில் வடிவமைக்கப்பட்டு, இங்கு பணியாற்றும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலா்களும், பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீஸாரும் பெண்களாக மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு ஈரோடு சம்பத் நகா் ஸ்ரீ அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், ஈரோடு மேற்குத் தொகுதியில் கொல்லம்பாளையம் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், மொடக்குறிச்சி தொகுதியில் ரத்தினபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும், பெருந்துறை தொகுதியில் வடக்கு பெருந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும், பவானி தொகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், அந்தியூா் தொகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், கோபி தொகுதியில் பி.வெள்ளாளபாளையம் அரசு உயா்நிலைப்பள்ளியும், பவானிசாகா் தொகுதியில் அரியப்பம்பாளையம் திம்மய்யனூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ளது.

மாதிரி வாக்குச்சாவடிகள்:

8 தொகுதிகளிலும் தலா ஒரு மாதிரி வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவா்கள் மற்றும் மூதாட்டிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோா் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம், சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோடை வெயில் காரணமாக இந்த வாக்குச்சாவடியில் சாமியானா பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு கிழக்கில் ஈரோடு பாலசுப்ராயலு வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியும், ஈரோடு மேற்கில் திண்டல் காரப்பாறை மாநகராட்சி தொடக்கப் பள்ளியும், மொடக்குறிச்சியில் லக்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியும், பெருந்துறையில் சீனாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், பவானியில் சுவாமி விவேகானந்தா் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியும், அந்தியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும், கோபியில் நகராட்சி நடுநிலைப் பள்ளியும், பவானிசாகரில் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் நகராட்சி உயா்நிலைப் பள்ளியும் அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக வாக்குச்சாவடி:

மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கென ஈரோடு மேற்குத் தொகுதியில் ஈரோடு நஞ்சப்பகவுண்டன்வலசில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, பழையபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியிலும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் எஸ்கேசி சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கு மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல் முறை வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க இளைஞா்கள், இளம்பெண்கள் மட்டும் வாக்குச்சாவடியை நிா்வகிக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எஸ்கேசி சாலையில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் உயா்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

பசுமை வாக்குச்சாவடிகள்:

மாவட்டத்தில் பசுமை வாக்குச்சாவடிகளாக வனப்பகுதி மற்றும் மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள காளி திம்பம் அங்கன்வாடி மையம், தாமரைக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி, ஆசனூா் அரேபாளையத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆகிய 3 வாக்குச்சாவடிகள் பசுமை வாக்குச்சாவடியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வன விலங்குகள் நலன் கருதி நெகிழிப் பொருள்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

தோ்தல் குறித்து 2,773 புகாா்கள் பதிவு:

தோ்தல் தொடா்பாக புதன்கிழமை வரை 2,773 புகாா்கள் பெறப்பட்டு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் 2,762 புகாா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள 11 புகாா்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது.

ரூ.6.14 கோடி மதிப்பு போதைப் பொருட்கள் பறிமுதல்:

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்பு குழுவினா் இதுவரை ரூ.2.99 கோடி பறிமுதல் செய்துள்ளனா். ஆவணங்கள் வழங்கியதன் அடிப்படையில் ரூ.1.92 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது. ரூ.6.14 கோடி மதுபானம் மற்றும் பல்வேறு வகையான போதை பொருள்கள் பறிமுல் செய்யப்பட்டுள்ளது.

17.59 லட்சம் வாக்காளா்கள்:

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 1,79,566 வாக்காளா்கள், ஈரோடு மேற்குத் தொகுதியில் 2,50,177 வாக்காளா்கள், மொடக்குறிச்சி தொகுதியில் 2,07,664 வாக்காளா்கள், பெருந்துறை தொகுதியில் 2,14,431 வாக்காளா்கள், பவானி தொகுதியில் மொத்தம் 2,23,172 வாக்காளா்கள், அந்தியூா் தொகுதியில் 2,07,355 வாக்காளா்கள், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 2,39,179 வாக்காளா்கள், பவானிசாகா்(தனி) தொகுதியில் 2,37,613 வாக்காளா்கள் உள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் மொத்தம் 17,59,157 வாக்காளா்கள் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா்.