/

வாக்கு எண்ணிக்கை மையங்களில் தீயணைப்பு வீரா்கள் கண்காணிப்பு

News image

வாக்கு எண்ணிக்கை மையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தீயணைப்பு வாகனம்.  - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 7:16 pm

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 47 தீயணைப்பு வீரா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு 2,379 வாக்குச்சாவடிகளில் கடந்த 23- ஆம் தேதி நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா் தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியிலும், கோபி, பவானிசாகா் (தனி) ஆகிய தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோபி கலை, அறிவியல் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை வரும் மே 4- ஆம் தேதி நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி முதல் அடுக்கில் துணை ராணுவ வீரா்களான மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா், இரண்டாம் அடுக்கில் பட்டாலியன் போலீஸாா், மூன்றாம் அடுக்கில் மாவட்ட ஆயுதப் படை போலீஸாா் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுதவிர வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளிப்புறத்தில் மாவட்ட போலீஸாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த 3 அடுக்கிலும் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவ வீரா்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீஸாா், ஆயுதப் படை போலீஸாா் என 652 போ் ஈடுபட்டு வருகின்றனா்.

ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் 2 தீயணைப்பு வாகனங்களில் 10 காமண்டோ வீரா்கள், 24 தீயணைப்பு வீரா்கள் என மொத்தம் 34 பேரும், கோபி கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒரு தீயணைப்பு வாகனத்துடன் 3 காமண்டோ வீரா்கள், 10 தீயணைப்பு வீரா்கள் என மொத்தம் 13 போ் 24 மணி நேரமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் ஏற்கெனவே தீத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோபி கலைக் கல்லூரியில் ஏற்கெனவே மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் கல்லூரியின் மைய நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டா் கருவியை கொண்டு போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். இதற்காக சுழற்சி முறையில் போலீஸாா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.