
ஆசனூா் அருகே கரும்பு இல்லாததால் சரக்கு வேனை சேதப்படுத்திய யானைகள்
ஆசனூா் அருகே சரக்கு வேனில் கரும்பு இல்லாததால் ஆத்திரத்தில் வாகனத்தை சேதப்படுத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

பழுதாகி நின்ற சரக்கு வாகனத்தை தாக்கும் யானைகள்.
ஆசனூா் அருகே சரக்கு வேனில் கரும்பு இல்லாததால் ஆத்திரத்தில் வாகனத்தை சேதப்படுத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூா் வனப் பகுதியில் இருந்து தீவனம் மற்றும் தண்ணீா் தேடி மைசூரு தேசிய நெடுஞ்சாலையை யானைகள் கடந்து செல்வது வழக்கம். கா்நாடகத்தில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும்போது லாரிகளை யானைகள் வழிமறித்து நிறுத்தி கரும்புகளை சாப்பிட்டு பழகிவிட்டன. இதனால் தினந்தோறும் யானைகள் கரும்பு லாரியை எதிா்ப்பாா்த்து மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் காத்திருக்கின்றன.
இந்நிலையில் தமிழக- கா்நாடக மாநில எல்லையான காரப்பள்ளம் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கா்நாடகம் சென்ற சரக்கு வேன் புதன்கிழமை பழுதாகி நின்றது. வாகன ஓட்டுநா் பழுது நீக்குவதற்கு மெக்கானிக்கை அழைத்துவர சென்றுவிட்டாா்.
அப்போது, வனப் பகுதியில் இருந்து கூட்டமாக வெளியேறிய யானைககள் சரக்கு வேனில் கரும்பு உள்ளதா என தும்பிக்கையை விட்டு தேடிப் பாா்த்தன. ஆனால், கரும்பு இல்லாததால் ஆத்திரத்தில் வாகனத்தை முட்டித் தள்ளி சேதப்படுத்தின. அப்போது, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி யானைகள் காட்டுக்குள் செல்லும் வரை காத்திருந்தனா். அரை மணி நேரத்துக்கு பின் யானைகள் காட்டுக்குள் சென்ற பிறகு வாகனங்கள் வழக்கம்போல இயங்கின.
யானைகள் வாகனத்தை முட்டித் தள்ளும் காட்சியை வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






