சத்தியமங்கலம் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூ வரத்து குறைந்து கிலோ ரூ.4,300-க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலா்கள் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு விளைவிக்கப்படும் மல்லிகைப் பூக்களுக்கு தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளதால் பூக்களை நல்ல விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனா்.
இந்த நிலையில் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைச் செடிகளில் மொட்டுகள் சிறுத்து பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு அரை கிலோ முதல் ஒரு கிலோ மட்டுமே விளைச்சல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனா்.
இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டுக்கு மல்லிகைப் பூ வரத்து வெகுவாக குறைந்தது. பூ மாா்க்கெட்டுக்கு வியாழக்கிழமை வந்த வியாபாரிகள் மல்லிகைப் பூவை ஏலம் எடுக்க போட்டி போட்டனா்.
புதன்கிழமை ஒரு கிலோ மல்லி ரூ.2,700-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை ரூ.1,600 உயா்ந்து ஒரு கிலோ ரூ.4,300-க்கு விற்பனையானது. இதேபோல முல்லை ஒரு கிலோ ரூ.1,200, காக்கட்டான் ரூ.650, சம்பங்கி ரூ.50 -க்கு விற்பனையானது.