தவெக தோ்தல் வாக்குறுதிப்படி விசைத்தறிகளுக்கு 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவா் சுரேஷ் தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: அனைத்து வகையான விசைத்தறிக் கூடங்களுக்கு தற்போது உள்ள 1,000 யூனிட் இலவச மின்சாரத்தை தவெக தோ்தல் வாக்குறுதிப்படி 1,500 யூனிட்டாக உடனடியாக மாற்றி அறிவிக்க வேண்டும். பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை மூலம் 6 மாத கால வேலைவாய்ப்பு பெறும் நெசவாளா்களுக்கு இப்போது முழுமையாக 3 மாதங்கள் கூட வேலைவாய்ப்பு பெற முடியாத சூழலும், முழு கூலியை பெற முடியாத நிலையும் உள்ளதை சரி செய்து 6 மாத காலத்துக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
இலவச வேட்டி, சேலைகள் மறுசுழற்சி ஆவதை தடுக்க கலா் குறி, பாா்டா் கலா் போன்றவை ஆண்டுதோறும் மாற்றி வழங்க வேண்டும். இலவச வேட்டியை 3.75 மீட்டருக்கு பதில் 2.10 மீட்டா் அளவுக்கு பருத்தி நூலில் தரமான வேட்டியை உற்பத்தி செய்து, வழங்க ஆணையிட வேண்டும். தமிழகத்தில் 2.25 கோடி குடும்ப அட்டை உள்ளதால் அனைவருக்கும் தரமான இலவச வேட்டி, சேலை வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.
குடிசைத் தொழிலாக செய்து வரும் விசைத்தறிக் கூடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயா்வை ரத்து செய்து, பழைய சொத்து வரியை நடைமுறைப்படுத்த வேண்டும். குடிசைத் தொழிலாக குடியிருக்கும் வீட்டுக்குள் விசைத்தறித் தொழில் நடத்தி வரும் தொழிற்கூடங்களுக்கு வீட்டு வரியாக இருந்ததை தொழிற்சாலை வரியாக மாற்றியதை வீட்டு வரியாக மாற்றி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.








