ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தெப்பக்காடு யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவு

முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு யானைகள் முகாமிலுள்ள 23 யானைகளுக்கு கடந்த 48 நாள்களாக அளிக்கப்பட்டு வந்த புத்துணர்வு நல வாழ்வு முகாம் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.

Updated On :29 மார்ச் 2018, 3:12 am

முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு யானைகள் முகாமிலுள்ள 23 யானைகளுக்கு கடந்த 48 நாள்களாக அளிக்கப்பட்டு வந்த புத்துணர்வு நல வாழ்வு முகாம் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.
நடப்பு ஆண்டில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு நல வாழ்வு முகாம் தேக்கம்பட்டியில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.  வனத் துறைக்குச் சொந்தமான யானைகளுக்கான புத்துணர்வு நல வாழ்வு முகாமைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு கடந்த பிப்ரவரி  9ஆம் தேதி  முதல் தெப்பக்காட்டில் முகாம் நடைபெற்று வந்தது.
இதில்,  தாயைப் பிரிந்த குட்டி யானை,  2 மக்னா யானைகள்,  கும்கிக்கள் உள்ளிட்ட 20  யானைகள் என மொத்தம் 23 யானைகள் பங்கேற்றன. முகாமை ஒட்டி 23 யானைகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கான சவாரி உள்ளிட்ட வழக்கமான அனைத்துப் பணிகளிலிருந்தும் முழு  ஓய்வு  அளிக்கப்பட்டிருந்தது. முகாம் நடைபெற்ற 48 நாள்களும் யானைகளுக்கு அரிசி சாதம்,  ராகிக் களி,  பழம்,  கரும்பு, தேங்காய்,  வெல்லம்,  தர்பூசணி, ஆப்பிள், அன்னாசி,  மாதுளை, சத்து மாவு,  மாத்திரைகள், லேகியம் மற்றும் சூரணம் ஆகியவை வழங்கப்பட்டு வந்தன. மேலும், தென்னை, சோளம், கூந்தப்பனை போன்ற பசுந்தீவனங்களும்  வழங்கப்பட்டு வந்ததால் அனைத்து யானைகளும்  முழு உடல் ஆரோக்கியம் பெற்றன. 
இந்நிலையில்,  இந்த முகாம் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.  இதை ஒட்டி  புதன்கிழமை மாலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிலுள்ள விநாயகர் கோயிலுக்கு வரவழைக்கப்பட்ட சந்தோஷ் மற்றும் மூர்த்தி ஆகிய இரண்டு யானைகளும் தும்பிக்கையை உயர்த்தி விநாயகரை வழிபட்டன. அதன் பின்னர் அனைத்து யானைகளும்  உணவுக்கூடத்திற்கு அருகே அணி வகுத்து நிறுத்தப்பட்டன. யானைகளுக்கு  சத்துமாவு மற்றும் பழங்களை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ரெட்டி வழங்கி முகாமை நிறைவு செய்தார். 
இம்முகாம் தொடர்பாக  முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
யானைகளுக்கான புத்துணர்வு நல வாழ்வு முகாம் நிறைவடைந்துள்ளதையடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி வியாழக்கிழமை முதல் தொடங்கப்படும். இப்பகுதியில் ஓரளவுக்கு தண்ணீர் வசதியும்,  பசுந்தீவனங்கள் இருப்பதாலும்,  வனத் தீ பிரச்னை இல்லாததாலும் தற்போதைக்கு புலிகள் காப்பகம் மூடப்படும் நிலை ஏற்படாது. 
தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்து சாடிவயல் முகாமுக்கு  ஜான் மற்றும் சேரன் ஆகிய  இரண்டு கும்கி யானைகள் ஏப்ரல் 5 ஆம் தேதிக்குப் பின்னர் அனுப்பிவைக்கப்படும். இவ்விரண்டு யானைகளுக்குப் பதிலாக சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு யானைகள் அனுப்பப்படவுள்ளன.  இதில்,  ஒரு யானை தெப்பக்காடு  யானைகள் முகாமுக்கும், மற்றொரு யானை ஆனைமலை முகாமுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.