கூடலூர் நகராட்சியிலுள்ள கோக்கால் பகுதிக்கு சாலை வசதி கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
கூடலூர் நகராட்சி 2ஆவது வார்டுக்கு உள்பட்ட கோக்கால் பகுதிக்கு செல்லும் சாலை பழுதடைந்து அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனம்கூட செல்ல முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது.
இந்நிலையில், சாலை வசதி செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நகராட்சி அலுலகத்தை முற்றுகையிட்டனர். கூடலூர் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நகராட்சி நிர்வாகத்திடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.