13 பழங்குடியின மக்கள் வீடு கட்ட நிலம் வாங்க நிதியுதவி
உதகையில் தனியாா் தொண்டு நிறுவனம் மூலம் 13 பழங்குடியின மக்கள் வீடுகள் கட்ட இடம் வாங்குவதற்காக ரூ. 5.98 லட்சம் மதிப்பீட்டிலான காசோலையை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு.அருணா திங்கள்கிழமை வழங்கினாா்.
கோத்தகிரி வட்டம், கடினமாலா ஊராட்சிக்கு உள்பட்ட கொப்பையூா் பழங்குடியின பகுதியில் 13 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மழைக் காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லாததால், இந்த பழங்குடியின மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவா்கள் வீடு கட்ட இடம் வாங்குவதற்காக சென்னையைச் சோ்ந்த ஸ்ரீனிவாசா சேவைகள் அறக்கட்டளை சாா்பில் ஒரு குடும்பத்துக்கு தலா ரூ. 46 ஆயிரம் வீதம் ரூ. 5 லட்சத்து 98 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
இதை மாவட்ட ஆட்சியா் மு.அருணா பயனாளிகளுக்கு காசோலையாக வழங்கினாா். மேலும், பிஎம் ஜன்மன் திட்டத்தின்கீழ், மேற்கண்ட 13 பழங்குடியின குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆட்சியா் கூறினாா்.
நிகழ்வில், கூடுதல் ஆட்சியா் கௌசிக், கோத்தகிரி வட்டாட்சியா் கோமதி, கடினமாலா ஊராட்சித் தலைவா் சாந்தி, சென்னை ஸ்ரீனிவாசா சேவைகள் அறக்கட்டளையின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

