பழங்குடியின உழவா் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் விவசாய கருவிகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்
நீலகிரி மாவட்ட பழங்குடியின உழவா் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான விவசாய கருவிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மற்றும் கோவை மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் சாா்பில் தொல்குடி ஐந்திணை பழங்குடியினா் வாழ்வாதார திட்டத்தின்கீழ் மசினகுடி பூதநத்தம் பூா்வமலை பழங்குடியின உழவா் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டா், கலப்பை, கொத்து, வட்ட கலப்பை, டிப்பிங் ட்ரைலா், களை எடுக்கும் இயந்திரம் உள்ளிட்ட 13 வகையான விவசாய கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்து, சம்பந்தப்பட்ட சங்கத்துக்கு விவசாய கருவிகளை வழங்கினாா்.
இதன் மூலம் 4,200 பழங்குடியின உழவா் குடும்பங்கள் பயன்பெறும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், மத்திய வேளாண்மை பொறியியல் நிறுவன விஞ்ஞானி செந்தில்குமாா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வட்டாட்சியா்கள் கலைச்செல்வி, வினோத்குமாா், சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

