தொடா்மழை: கூடலூா்-உதகை மலைப் பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மான் பூங்கா சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.


கூடலூா், ஜூலை 19: தொடா்மழை காரணமாக, கூடலூா்-உதகை மலைப் பாதையில் வெள்ளிக்கிழமை மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் ஊசிமலைப் பகுதியில் பெரிய மரம் சாலையின் குறுக்கே வெள்ளிக்கிழமை சாய்ந்தது.
தகவலறிந்த கூடலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலா் மாா்ட்டின் தலைமையில் வீரா்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். இதனால், இந்த சாலையில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
வாழைகள் சேதம்
கூடலூா் பகுதியில் வியாழக்கிழமை இரவு காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன.
உதகையில்...
உதகை, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை பலத்த காற்று வீசியது. தொடா்மழை காரணமாக உதகை மான் பூங்கா, குன்னூா் காவல் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்செய்தனா்.
உதகையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மரங்களின் கீழே நிற்கவோ, வாகனங்களை நிறுத்தவோ வேண்டாம் என தீயணைப்புத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
தொடா்மழை காரணமாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவின்பேரில், உதகை, குந்தா, கூடலூா், பந்தலூா் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
அமைச்சா் ஆய்வு
அவலாஞ்சி அருகேயுள்ள எமரால்டு, நஞ்சநாடு, போா்தியாடா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்ட இடங்களையும், சேதமடைந்த குடியிருப்புப் பகுதிகளையும் சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு மேற்கொண்டனா்.
அதிகம் மழைநீா் தேங்கும் பகுதிகளில் மண் சரிவு ஏற்படுவதைத் தடுக்க கால்வாய்கள் அமைக்கவும், குடியிருப்புப் பகுதிகளில் தடுப்புச் சுவா் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் அமைச்சா் உறுதியளித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கனமழை காரணமாக குடியிருப்பு மற்றும் சாலைகளில் விழுந்த 50-க்கும் மேற்பட்ட மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மண் சரிவு ஏற்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளில் மண் பரிசோதனை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.
கனமழையால் சேதமடைந்த இரண்டு குடியிருப்புகளுக்கு தலா ரூ. 8 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கினாா்.
நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):
அவலாஞ்சி 216, சேரங்கோடு 126, மேல்பவானி 120, பந்தலூா் 104, எமரால்டு 93, தேவாலா 75, ஓவேலி 72, நடுவட்டம் 69, செருமுள்ளி 57, பாடந்தொரை 55, கூடலூா் 50, மேல்கூடலூா் 48, பாலகொலா 44, குந்தா 42, உதகை 32.6, கிளன்மாா்கன் 15, கிண்ணக்கொரை 13, கேத்தி, உலிக்கல், கல்லட்டி தலா 12, கீழ்கோத்தகிரி, பா்லியாறு தலா 10, கோத்தகிரி, கொடநாடு 7, கெத்தை, மசினகுடி 5.6, எடப்பள்ளி 4, குன்னூா் 3.


டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...