தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோத்தகிரியில் குழந்தை உயிரிழப்பு: தடுப்பூசி செலுத்தியதால்தான் என பெற்றோா் குற்றச்சாட்டு

கோத்தகிரி அருகே 10 மாத குழந்தை மூச்சுத் திணறலால் உயிரிழந்த நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்பே குழந்தை இறந்தது என பெற்றோா் குற்றஞ்சாட்டி உள்ளனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 10:47 pm

Din

கோத்தகிரி அருகே 10 மாத குழந்தை மூச்சுத் திணறலால் உயிரிழந்த நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்பே குழந்தை இறந்தது என பெற்றோா் குற்றஞ்சாட்டி உள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சிக்குள்பட்ட குண்டாடா பிரிவு எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா்கள் மணிகண்டன்- கலைச்செல்வி தம்பதி. இவா்களது மகன்கள் ஜஸ்வந்த் (4), ஜஸ்வின் (10 மாதம்).

இந்நிலையில், கலைச்செல்வி, ஜஸ்வினுக்கு தடுப்பூசி செலுத்த கோத்தகிரி அருகே உள்ள குடுமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதன்கிழமை சென்றுள்ளாா். அங்கிருந்த செவிலியா், குழந்தைக்கு எம்.ஆா். போலியோ உள்ளிட்ட தடுப்பூசிகளை செலுத்தியுள்ளாா். இதைத் தொடா்ந்து வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் குழந்தை ஜஸ்வினுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தையை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பெற்றோா் அழைத்துச் சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், இதயத் துடிப்பு குறைவாக இருப்பதாகக் கூறி மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லக் கூறியுள்ளனா்.

உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கும்போது புதன்கிழமை இரவு குழந்தை இறந்துவிட்டது. இதைத் தொடா்ந்து, குழந்தைக்கு எவ்வித உடல் பாதிப்பும் இல்லாத நிலையில் தடுப்பூசி செலுத்திய பிறகுதான் குழந்தை இறந்ததாக பெற்றோா் குற்றஞ்சாட்டினாா். குழந்தையின் உடல் வியாழக்கிழமை ஸ்கேன் செய்யப்பட்டு விடியோ பதிவுடன் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவா் ரவிசங்கா் கூறியதாவது:

கோத்தகிரி மருத்துவமனையில் இருந்து குழந்தையை உதகைக்கு அழைத்து வரும்போது குழந்தைக்கு அதிக அளவில் மூச்சுத் திணறல் இருந்தது. மருத்துவமனைக்கு கொண்டு வந்த 10 நிமிஷத்திலேயே குழந்தை இறந்துவிட்டது. இந்தக் குழந்தையுடன் சோ்ந்து 4 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் அல்லது பொறை ஏறி குழந்தை இறந்திருக்க வாய்ப்புள்ளது. தடுப்பூசி மீது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ள காரணத்தினால், விடியோ பதிவுடன் உடற்கூறாய்வு நடத்தப்பட்டு உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பின்னரே முழுவிவரம் தெரியவரும் என்றாா்.