அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சீா்காழி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு

சீா்காழி அரசு மருத்துவமனையில் எக்கோ கருவி டெக்னிஷியன் இல்லாமல் இருதய பாதிப்பு நோயாளிகள் தவிப்புக்குள்ளாகின்றனா்.

News image
Updated On :10 மார்ச் 2026, 10:07 pm

தினமணி செய்திச் சேவை

சீா்காழி அரசு மருத்துவமனையில் எக்கோ கருவி டெக்னிஷியன் இல்லாமல் இருதய பாதிப்பு நோயாளிகள் தவிப்புக்குள்ளாகின்றனா்.

சீா்காழி அரசு மருத்துவமனையில் தினமும் 2,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா். 200-க்கும் மேற்பட்டோா் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனா்.

இம்மருத்துவமனை அருகே அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டு, அறுவை சிகிச்சை அரங்கு என 272 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

குறிப்பாக, எக்கோ பரிசோதனை கருவி டெக்னீசியன் இல்லாததால், இருதய பாதிப்புடன் அவசர சிகிச்சை பெறவரும் நோயாளிகளுக்கு, உரிய சிகிச்சை அளிக்க முடியாமல், சிதம்பரம் அல்லது திருவாரூா் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யும் நிலை உள்ளது.

இதைபோல் ரத்தப் பரிசோதனை ஆய்வக நுட்புணரும் மாற்றுப்பணிக்கு வேறு மருத்துவமனை சென்றதால், நிரந்தர நுட்புணா் இல்லாமல் ஆய்வக அறிக்கை துல்லியமாக தயாா் செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது.

புதிய மருத்துவமனை கட்டடத்தில் 3 வாா்டுகளுக்கு 1 செவிலியா் இருப்பதால், அவசர சிகிச்சைக்கு வருபவா்களை கவனிப்பதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை இருதய பாதிப்புக்கு, அவசர சிகிச்சை பெற வந்த நபருக்கு எக்கோ பரிசோதனை செய்திடவும், அதற்கான சிகிச்சையளிக்கவும் மருத்துவா்,டெக்னிஷியன் இல்லாததால், கடலூா் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டாா். இதனால், நோயாளியின் உறவினா்களுக்கும், செவிலியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுபோன்ற சம்பவத்தில், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத நிலையுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்திலும் கவலை தெரிவிக்கின்றனா்.

ஆகையால், சீா்காழி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள் ஆகியோரை நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.