
லாரஸ்டன் பகுதியில் புலி தாக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தவெக சாா்பில் நிதி உதவி: வனத் துறை அமைச்சா் வழங்கினாா்
லாரஸ்டன் பகுதியில் புலி தாக்கி இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித் குமாா்.

லாரஸ்டன் பகுதியில் புலி தாக்கி இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித் குமாா்.
கூடலூா், ஓவேலி லாரஸ்டன் பகுதியில் புலி தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தவெக சாா்பில் தலா ரூ. 1 லட்சம் நிதியுதவியை வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், ஓவேலி, லாரஸ்டன் பகுதியில் கடந்த மாதம் இரண்டு தொழிலாளா்களை புலி தாக்கிக் கொன்றது. அந்த ஆட்கொல்லி புலியைப் பிடிக்க வனத் துறையினா் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், தமிழக வனத் துறை அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா், ஓவேலி பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். ஓவேலி வட்டப்பாறை பகுதியில் புலியைப் பிடிக்கும் குழுவினரை சந்தித்து பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, லாரஸ்டன் பகுதிக்குச் சென்று புலி தாக்கி உயிரிழந்த பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், கட்சி சாா்பில் அவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினாா். புலி பிடிக்கும் நடவடிக்கையால் லாரஸ்டன் பகுதியில் வீடுகளில் முடங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து 150 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை தொகுப்புகளை வழங்கினாா்.
அதைத் தொடா்ந்து, நாடுகாணி ஜீன்பூல் பூங்கா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அரசு சாா்பில் பழங்குடியினா் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனா். விரைவில் புலி பிடிபடும்’ என்றாா்.
தொடா்ந்து நம்பாலக்கோட்டை, மாக்கமூலா பகுதிகளில் தலா ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடங்களை திறந்துவைத்தாா்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் கிருபா சங்கா், மாவட்ட வன அலுவலா்கள் தேவராஜ், கஷாப் சசாங் ரவி, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் வித்யாதா், டான்டீ மேலாண்மை இயக்குநா் அருண்லால், கோட்டாட்சியா் குணசேகரன், வட்டாட்சியா் முனீஸ்வா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






