ஊதியூர் அருகே கோயில் நிலத்தில் தனியார் பால் நிறுவனம் மேற்கொண்ட கட்டுமானப் பணிகள் இந்து சமய அறநிலையத் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, அந்த இடத்தில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்த ஊதியூரில் பிரசித்தி பெற்ற உத்தண்ட வேலாயுத சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஊதியூர் சுற்றுப்புறப் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இந்தக் கோயில் நிலங்களில் குத்தகை அடிப்படையில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்துள்ளனர். காலப்போக்கில் சிலர், அந்த நிலங்களுக்கு போலிப் பட்டா பெற்று விற்பனை செய்துவிட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஊதியூர் மலையடிவாரத்தில், குண்டடம் சாலையை ஒட்டியுள்ள பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான 95 ஏக்கர் நிலத்தை தனியார் பால் நிறுவனத்தினர் விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இடத்தில் கடந்த ஜனவரியில் கட்டுமானப் பணியை அந்நிறுவனம் தொடங்கியது. பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தன. தனியார் பால் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் நிலம், உத்தண்ட வேலாயுத சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது எனப் புகார்கள் எழுந்தன.
அதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன் சிவன்மலை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கண்ணதாசன் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், அந்த இடத்தில் தற்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
"ஊதியூர் தேவதாய கிராம இனாம் 1590.37 நிலங்களின் மேல்வாரம் (உரிமை மூலம் சொத்துரிமை), குடிவாரம் (உழவடை பாத்தியம் குத்தகை உரிமை) இரண்டு உரிமைகளும் கோயில்களுடையது.
இதனை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்வோர் மீது பிணையில் வர முடியாத குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று அந்த எச்சரிக்கைப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.