குடிநீர் கேட்டு பல்லடம் அருகேயுள்ள காட்டூர் பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், காட்டூர் ஊராட்சிக்கு உள்பட்ட காட்டூர் கிராமத்தில் பொங்கலூர் - கெங்கநாயக்கன்பாளையம் சாலையில் அக்கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
காட்டூர் ஊராட்சியில் 5 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. இவற்றில் ஒரு ஆழ்துளைக் கிணற்றில் மட்டும் மின் மோட்டார் வைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என்பதால் மற்ற ஆழ்துளைக் கிணறுகளிலும் மின் மோட்டார் பொருத்து தண்ணீர் விநியோகம் செய்யவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பொங்கலூர் - கெங்கநாயக்கன்பாளையம் சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மீனாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜமாணிக்கம், காமநாயக்கன்பாளையம் போலீஸார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், போதிய தண்ணீர் விநியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அக்கிராம வழித்தடத்தில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.