திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகையைப் புதுப்பிக்க டிசம்பா் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப் படிப்பு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழில் படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க புதுப்பிப்பு விண்ணப்பப் படிவங்களை, அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வரும் டிசம்பா் 31ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பத்தில் மாணவா்கள் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை குறிப்பிட வேண்டும். ஆதாா் எண் இணைக்கப் பெற்ற மாணவா்களின் வங்கிக் கணக்கிற்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.