அவிநாசி: அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் திங்கள் கிழமை அதிகாலை 3 மணிக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
கொங்கு ஏழு சிவதலங்களுள் முதன்மை வாய்ந்த சிவஸ்தலமான அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 10ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஞாயிற்றுக்கிழமை திருவாதிரை நாச்சியார் திருவீதி உலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியாக திங்கள் கிழமை அதிகாலை சிவகாமியம்மாள் உடனமர் நடராஜப் பெருமானுக்கு பஞ்சாமிர்தம், நெய், தேன், கரும்புசர்க்கரை, வில்வப்பொடி, நெல்லிப்பொடி, அரிசிமாவு, திருமஞ்சனம், மஞ்சள் பொடி, தேங்காய்துருவல், மாதுளை, பால், தயிர், கரும்புச்சாறு, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சப்போட்டா, அன்னாசிப்பழம், கொய்யா, விளாம்பழம், எலுமிச்சை, இளநீர், சந்தனம், பன்னீர், சங்காபிஷேகம், சொர்ணாபிஷேகம், ஸ்நாபனகலச புனிததீர்த்தம் உள்ளிட்ட திரவியங்களால் ஆடல்வல்லானுக்கு மகா அபிஷேகமும், மகாதீபாராதனையும், ஆருத்ரா மகா தரிசனமும் நடைபெற்றது.
காலை 8 மணிக்கு திருக்கோவில் வெளிப்புற வளாகத்தில் உள்ள அரச மரத்தடி விநாயகர் கோவிலைச்சுற்றி "பட்டி சுற்றுதல்'' நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணிக்கு சிவகாமியம்மாள் உடனமர் நடராஜப் பெருமான் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.