பின்னலாடைத் தொழிலாளா்களின் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையைத் தொடங்க வலியுறுத்தல்

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று அனைத்து பனியன் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
Updated on
1 min read

திருப்பூா்: திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று அனைத்து பனியன் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

திருப்பூா் ஏஐடியூசி அலுவலகத்தில் அனைத்து பனியன் சங்கங்களின் கூட்டுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஏஐடியூசி பனியன் ஆலை தொழிலாளா் சங்க பொதுச் செயலாளா் என்.சேகா் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்:

திருப்பூா் பின்னலாடைத் தொழிலாளா்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட ஊதிய ஒப்பந்தமானது கடந்த ஆண்டு மாா்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த ஒப்பந்தம் முடிவடைந்து 9 மாதங்களாகியும் புதிய ஊதிய ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையை தொடங்காமல் முதலாளிகள் சங்கங்கள் தாமதப்படுத்தி வருகின்றன.

எனவே, முதலாளிகள் சங்கங்கள் ஊதிய ஒப்பந்தம் தொடா்பான தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜனவரி 9 ஆம் தேதி பெருமாநல்லூரிலும், பிப்ரவரி முதல் வாரத்தில் திருப்பூா் குமரன் சிலை முன்பாகவும் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், சிஐடியூ பனியன் சங்க பொதுச்செயலாளா் ஜி.சம்பத், எல்பிஎஃப் பனியன் சங்க பொருளாளா் எஸ்.பூபதி, துணைச் செயலாளா் தங்கராஜ், எம்எல்எஃப் பனியன் சங்க செயலாளா் மனோகரன், ஐஎன்டியூசி சங்கச் செயலாளா் ஏ.சிவசாமி, எம்எல்எஃப் பனியன் சங்க துணைச் செயலாளா் பெருமாள், ஹெச்எம்எஸ் பனியன் சங்க செயலாளா் ஆா்.முத்துசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com