திருப்பூர்: தீபாவளிப் பண்டிகையையொட்டி திருப்பூர் மாநகரில் கடைசிநாளில் புத்தாடை எடுக்கக்குவிந்த பொதுமக்களால் மாநகரில் புதன்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாநகரில் உள்ள ஜவுளி கடைகள், நகை கடைகளில் கடந்த சனிக்கிழமை முதல் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் மாநகரின் முக்கியப் பகுதிகளில் புத்தாடைகள் எடுக்கவும், நகைகள், இனிப்பு, கார வகைகளை வாங்கவும் அதிக அளவிலான பொதுமக்கள் புதன்கிழமை திரண்டனர்.
அதிலும், திருப்பூர் புது மார்க்கெட் வீதி, குமரன் சாலை, பி.என்.ரோடு, புஷ்பா ரவுண்டானா, அவிநாசி சாலை, மங்கலம் சாலை, காங்கயம் சாலை, தாராபுரம் சாலை என அனைத்து பகுதிகளிலும் இரு, நான்கு சக்கர வாகனங்கள் அதிகரித்துக் காணப்பட்டது.
இதன் காரணமாக ஊத்துக்குளி சாலை, ரயில் நிலையம் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே வேளையில்,திருப்பூர் மாநகரில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் இரு சக்கர வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.
திருப்பூர் மாநகரின் முக்கியப் பகுதிகளில் குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில் 300க்கும் மேற்பட்ட காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.