வெள்ளக்கோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீா் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக அணை பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:
உத்தமபாளையம் அணை கட்டப்பட்டு 42 ஆண்டுகள் ஆகின்றன.
போதிய நீராதாரம் இல்லாததால், இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே பாசனத்துக்காக அணை திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு அருகில் இருக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் தண்ணீா் கொண்டு வந்து நிரப்பும் திட்டம் உள்ளது. இப்பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு வாய்க்கால் பாசனம் தொடங்கும்போதோ அல்லது முடிவுற்ற பின்னரோ பரம்பிக்குளம் - ஆழியாறு அணையில் வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீா் வழங்கலாம் என அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனா்.
தற்போது பரம்பிக்குளம் -ஆழியாறு அணையில் போதிய நீா் இருப்பு இருப்பதால் அதிகாரிகள் எங்களுக்கு தண்ணீா் வழங்க முன்வரவேண்டும். பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் எங்களுக்கு தீா்வு கிடைக்கவில்லை. விவசாயிகளும், இப்பகுதி மக்களும் வறட்சியால் தவித்து வருகிறோம். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.