அண்டை நாடுகளை விட அதிகரித்து வரும் பட்டினியால் வாடுவோரின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொமதேகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
கொமதேக மாநில பொதுக்குழுக் கூட்டம் அவிநாசி தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, கொமதேக மாநில பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை வகித்தார். பொருளாளர் கே.கே.சி.பாலு, இளைஞரணி செயலாளர் சூர்யமூர்த்தி, கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவைத் தலைவர் தேவராஜ்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையும் படிக்க | ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடைதிறப்பு
மாவட்ட செயலாளர் சுகுமார் வரவேற்றார். மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி, திருச்சி உப்பிலியாபுரம் த.முருங்கபட்டியில் தனியார் வெடி மருந்து ஆலை ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க வேண்டும், விசைத்தறிக்கு இரு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 750 யூனிட் என்பதை உயர்த்தி 1000 யூனிட் மின்சாரம் வழங்க வேண்டும், அண்டை மாநிலங்களை விட அதிகரித்து வரும் பட்டினியால் வாடுவோரின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும் கொங்குநாட்டின் நீர் பாசன திட்டமாக பரம்பிக்குளம், ஆழியாறு, திருமணிமுத்தாறு, ஆணைமலை நல்லாறு உள்ளிட்டவற்றை நிதி நிலை அறிக்கையில் அறிவித்ததற்காகவும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததற்காகவும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, உத்தரபிரதேச வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் உயரிழந்ததற்கு கண்டனம் தெரிவிப்பது என்பது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிக்க | அதிமுக, பாஜக கூட்டணி மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கிறது: உ.வாசுகி
நிறைவாக உயிரிழந்த கொமதேக மாநில அவைத் தலைவர் பி.ஆர்.டி.சென்னியப்பனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, புதிய அவைத் தலைவராக ஈரோடு ஜெகநாதன் நியமிக்கப்பட்டார்.