திருப்பூர்: திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே ஓடையில் மின் மயானம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லடத்தை அடுத்த பச்சாபாளையத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உள்பட்ட 8 ஆவது வார்டு பச்சாபாளையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், எங்களது ஊரில் மழை பெய்தால் ஓடையில் வரும் நீர் திருப்பூர் நொய்யல் ஆற்றில் கலக்கிறது.
இந்த ஓடையின் அருகில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும், இரு பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், தனியார் மருத்துவமனை, மின் பொறியாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகளும் உள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்படும் கழிவுகளை ஏற்கெனவே ஓடையில் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய்த் தொற்று பரவும் அபராயமும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மணப்பாறையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
இதனிடையே, பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது ஓடையில் மின் மயானம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது மக்கள் விரோத திட்டமாகும். இந்த ஓடையில் ஏற்கெனவே நிலவி வரும் சுகாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்படாத நிலையில் தற்போது மின் மயானம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.