அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேரோட்டம் வியாழக்கிழமை காலை கோலாகலமாக துவங்கியது.
கொங்கு ஏழு சிவ தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூர்த்தி நாயனார், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் விளங்குகிறது.
இதையும் படிக்க | காலமானார் ஆர்.சரஸ்வதி அம்மாள்
இக்கோயிலில் மே 5ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கப்பட்ட சித்திரைத் தேர்த் திருவிழா மே.18ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
அதன்படி வியாழக்கிழமை காலை, அவிநாசி லிங்கேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது. இதில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிவாச்சாரியார்கள், ஆன்மீகப் பெருமக்கள், பக்தர்கள் என அனைத்து தரப்பினரும் அரோகரா கோஷம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதையும் படிக்க | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேலும், திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு வருகிறது. திருத்தேரில் சோமஸ்கந்தர் சொர்ண அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இருக்கும் தேரோட்டத்தில், பல்வேறு அமைப்பினர் சார்பில் அனைவருக்கும் அன்னதானம், குடிநீர், நீர்மோர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது . ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்து நெரிசல் சீரமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேர்த் திருவிழாவை, காண்பதற்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.