அவிநாசி: நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் அவிநாசி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில், அவிநாசியை சேர்ந்த ஆர். தக்ஷனா (8), டி. பவிஷ்னா (10), டிம். சபரிஸ்(11) ஆகியோர் பங்கேற்று தமிழகம் சார்பில் சாம்பியன் பட்டத்தை பெற்றனர். இதையடு்த்து, இவர்கள் 3 பேரும், நேபாளத்தில் நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்று, இந்தியா சார்பில் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
இதுகுறித்து அவிநாசி தபஸ் யோகா மைய ஆசிரியர்கள் ரகுபாலன், சத்யா ரகுபாலன் ஆகியோர் கூறியதாவது:
“இந்த மாணவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக தபஸ் யோகாலயாவில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில், இந்தியா, நேபாளம், பூட்டான், இலங்கை, மலேசியா ஆகிய பகுதியைச் சேர்ந்த 400-க்கு மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா 12 இடத்தைப் பிடித்தததில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், 5 இடத்தை பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். இந்த 5 பேரில் அவிநாசியைச் சேர்ந்த ஆர். தக்ஷனா, டி. பவிஷ்னா ஆகியோர் இரண்டு தங்கப் பதக்கங்களும், டிம். சபரிஸ் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளார்.”