அவிநாசி: குறுமைய அளவிலான தடகளப் போட்டியில், அவிநாசி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்தம், தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தனர்.
அவிநாசி குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள், அவிநாசி தனியார் பள்ளி மைதானத்தில் செப்டம்பர் 7, 8, 9, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் 15, 17, 19 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில், 100, 200, 800 மீட்டர் ஓட்டப் பந்தயம், தொடர் ஓட்டம், உயரம், நீளம் தாண்டுல், தடை தாண்டுதல், குழு போட்டிகளான கபடி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. 41 பள்ளிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதில், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 19 தங்கம், 12 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 38 பதக்கங்களை குவித்து ஒட்டு மொத்த சம்பியன் பட்டம் பெற்றனர். 12-ம் வகுப்பு மாணவன் யாகவராஜ் பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்று, தனி நபர் சம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு
மேலும் கடந்த மாதம் அவிநாசி அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டியில், மாணவர்கள் யாகவராஜ் விக்னேஸ்வரன், கவின், குருபிரசாத் ஆகியோர் வெற்றி பெற்று நாமக்கல்லில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர். சாதனை படைத்த மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியை ந.கவிதா ஆகியோரை பள்ளித் தலைமையாசிரியை ஆனந்தகுமாரி, ஆசிரியர்கள் பல்வேறு சமூக அமைப்பினர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.