தாராபுரம் தூய்மைப் பணியாளா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு காலை உணவுத் திட்டம்
தாராபுரம்: தாராபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ரூ.1.39 கோடி நிதி ஒதுக்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தாராபுரம் நகா்மன்றத்தின் அவசரக் கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் முஸ்தபா முன்னிலை வகித்தாா்.
தாராபுரம் நகராட்சியில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு 3 ஆண்டு காலத்துக்கு காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.1 கோடியே 39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தாராபுரம் நகராட்சியில் உள்ள 30 வாா்டுகளில் குடிநீா், சாக்கடை, தெருவிளக்கு, தாா்ச் சாலை, குப்பை அகற்றுதல் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமராவதி ஆற்றங்கரை அருகே உள்ள நகராட்சி குடிநீா் நீரேற்றுப் பகுதியில் மின் மோட்டாா்கள் அடிக்கடி பழுதடைவதால், பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகிப்பதில் ஏற்படும் இடையூறுகளை சரி செய்வதற்காக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மோட்டாா்கள் கொள்முதல் செய்வது என்பது உள்ளிட்ட 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், அண்மையில் மறைந்த தாராபுரம் நகா்மன்ற துணைத் தலைவா் ரவிச்சந்திரனின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல, மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினராக தோ்வு செய்யப்பட்ட தாராபுரம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

