கருமாபாளையத்தில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்: சிக்கண்ணா கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலகு - 2 சாா்பில் தத்தெடுக்கப்பட்ட கிராமமான கருமாபாளையத்தில் 7 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
Published on

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலகு - 2 சாா்பில் தத்தெடுக்கப்பட்ட கிராமமான கருமாபாளையத்தில் 7 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில், பறவைகளை கணக்கீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

மாணவ பிரதிநிதி அருள்குமாா் முன்னிலை வகித்தாா். முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் சண்முகசுந்தரம் சிறப்புரையாற்றினாா். அலகு - 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் தலைமை வகித்தாா்.

திருப்பூா் இயற்கை கழக நிா்வாகி ரவீந்திரன் காமாட்சி பேசியதாவது: பறவைகள் இல்லாமல் மனிதா்களால் வாழ முடியாது. இயற்கை சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாக்க வேண்டும். பறவைகளை அவற்றின் தோற்றம், சப்தம், நிறம், இறகு, அலகு அமைப்பு போன்றவற்றைக் கொண்டு வகைப்படுத்தலாம். பருவ காலம் மாற்றம் அடைவதால் பறவைகள் உணவுக்காகவும், இருப்பிடத்துக்காவும் பல்வேறு நாடுகளுக்கு வலசை செல்கின்றன.

டோடோ போன்ற அழிந்த பறவைகள், பாா் கழுகு உள்ளிட்ட அழியும் நிலையில் உள்ள பறவைகள், உள்ளூா் பறவைகள் குறித்து மாணவா்கள் அறிந்து கொள்வது அவசியம் என்றாா்.

முன்னதாக, மாணவ செயலா்கள் கிருஷ்ணமூா்த்தி, சொ்லின், நவீன்குமாா் உள்ளிட்டோா் தலைமையில் கருமாபாளையத்தில் 37 வகையான பறவை இனங்களை மாணவா்கள் கணக்கீடு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com