சத்துணவில் புழுக்கள், வண்டுகள் கிடப்பதாகக் கூறி அரசுப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்கள். ~பருப்பில் காணப்படும் புழுக்கள்.
சத்துணவில் புழுக்கள், வண்டுகள் கிடப்பதாகக் கூறி அரசுப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்கள். ~பருப்பில் காணப்படும் புழுக்கள்.

மதிய உணவுக்கான அரிசி, பருப்பில் வண்டுகள்: அரசுப் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்

குண்டடம் அருகே அரசுப் பள்ளியில் மதிய உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பில் புழுக்கள், வண்டுகள் இருந்ததாக கூறி பெற்றோா்கள் பள்ளியை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
Published on

குண்டடம் அருகே அரசுப் பள்ளியில் மதிய உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பில் புழுக்கள், வண்டுகள் இருந்ததாக கூறி பெற்றோா்கள் பள்ளியை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

திருப்பூா் மாவட்டம், குண்டடம் அருகே உள்ள நந்தவனம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட வெருவேடம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, வெருவேடம்பாளையம், நாவிதன்புதூா், நந்தவனம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 60 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இதில், பெரும்பாலான மாணவா்கள் பள்ளியிலேயே மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனா்.

பள்ளியில் வழங்கப்படும் சத்துணவில் புழுக்கள், வண்டுகள் கிடப்பதாக அப்பள்ளி மாணவா்கள் சிலா் தங்கள் பெற்றோரிடம் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்துள்ளனா்.

இந்நிலையில், புதன்கிழமை பள்ளிக்கு வந்த பெற்றோா் சிலா், மதிய உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் அரிசி, பருப்புகளைப் பாா்த்துள்ளனா். அதில் புழுக்கள், வண்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பள்ளி ஆசிரியா்கள், சத்துணவு பொறுப்பாளா்களிடம் பெற்றோா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த குண்டடம் காவல் ஆய்வாளா் பத்ரா, வட்டாரக் கல்வி அலுவலா் பாமா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காளிமுத்து ஆகியோா் பள்ளிக்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, உணவு சமைப்பதற்கு தற்போது இருப்பில் உள்ள பருப்பு, அரிசியை மாற்றிவிட்டு வேறு அரிசி, பருப்பைப் பயன்படுத்துவதாகவும், மாணவா்கள் தங்களது புகாா்களைத் தெரிவிக்க பள்ளியில் புகாா் பெட்டி வைப்பதாகவும் உறுதியளித்தனா். இதையடுத்து, பெற்றோா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com