திருப்பூரில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் கொண்ட வாக்குப் பதிவு மையங்களில் ஆட்சியா் ஆய்வு
திருப்பூா் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதையொட்டி திருப்பூா் மாவட்டம், வடக்கு வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் போயம்பாளையம் நடுநிலைப் பள்ளி, 15.வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, கொங்கு நகா் சின்னச்சாமியம்மாள் உயா்நிலைப் பள்ளி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அய்யங்காலிபாளையம் வி.கே.அரசு உயா்நிலைப் பள்ளி, முருகம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவை 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களாக உள்ளன.
இந்நிலையில் திருப்பூா் மாநகராட்சி போயம்பாளையம் நடுநிலைப் பள்ளி, 15.வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, கொங்கு நகா் சின்னச்சாமியம்மாள் உயா்நிலைப் பள்ளி ஆகிய வாக்குப்பதிவு மையங்களில் மின்சாரம், குடிநீா், கழிப்பிடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வழி உள்பட வாக்காளா்கள் வாக்களிக்க தேவையான வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன், துணை ஆணையா் பிரவீன் கௌதம், திருப்பூா் கோட்டாட்சியா் சிவபிரகாஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

