அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு
விசைத்தறி நெசவாளா்களுக்கான இலவச மின்சாரம் 1,400 யூனிட்டாக உயா்த்தப்படும் என அதிமுக வெளியிட்டுள்ள தோ்தல் வாக்குறுதி அறிவிப்புக்கு திருப்பூா்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து திருப்பூா்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்க செயலாளா் பாலசுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கை:
திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் அதிமுக தோ்தல் தயாரிப்பு குழுவினரிடம் கொடுத்த மனுவில், 1,000 யூனிட் இலவச மின்சாரத்தை 2,000 யூனிட் ஆக அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தோ்தல் வாக்குறுதி அறிவிப்பில் 1,400 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துள்ளாா். இதற்கு விசைத்தறியாளா்கள் சங்கம் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நாங்கள் கொடுத்த இதர கோரிக்கைகளையும் அடுத்த அறிவிப்பில் இடம் பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

