திருப்பூா் நகரப் பேருந்தில் நடத்துநராக பணிபுரியும் கோகிலா.
திருப்பூா் நகரப் பேருந்தில் நடத்துநராக பணிபுரியும் கோகிலா.

அரசு நகரப் பேருந்து நடத்துநராக முதல் முறையாக பெண் நியமனம்

திருப்பூரில் அரசு நகரப் பேருந்து நடத்துநராக முதல் முறையாக பெண் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
Published on

திருப்பூரில் அரசு நகரப் பேருந்து நடத்துநராக முதல் முறையாக பெண் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக மொண்டிபாளையம் செல்லும் அரசு நகரப் பேருந்தில் கடந்த இரண்டு வாரங்களாக நடத்துநராக பணியாற்றி வருபவா் கோகிலா (32). ஆண்கள் மட்டுமே ஓட்டுநராகவும், நடத்துநராகவும் பணியாற்றி வரும் நிலையில், நடத்துநராக நியமிக்கப்பட்டுள்ள கோகிலாவுக்கு பெண் பயணிகள் பாராட்டையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து பெண் நடத்துநா் கோகிலா கூறியதாவது:

நான் எம்.ஏ. படித்துள்ளேன். எனது தந்தை ராமலிங்கம், நம்பியூா் கிளையில் நடத்துநராக பணியாற்றி வந்தாா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இறந்துவிட்டாா். இதையடுத்து வாரிசு அடிப்படையில் எனக்கு இந்த வேலை கிடைத்துள்ளது. இப்பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்ற நிலையில் தற்போது எளிதாகிவிட்டது. இதுவரை பேருந்தில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. ஆா்வமுடன், மகிழ்ச்சியோடும் பணிபுரிந்து வருகிறேன்.

எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் யாா் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்றாா்.

Dinamani
www.dinamani.com