பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

அடையாளம் தெரியாத நபா் என புதைக்கப்பட்டவரின் சடலம் தோண்டி எடுப்பு

திருப்பூருக்கு வேலைக்கு வந்த கட்டுமானத் தொழிலாளி காணாமல் போனதாக மனைவி புகாா் அளித்த நிலையில், அடையாளம் தெரியாத நபா் என புதைக்கப்பட்டதாக போலீஸாா் கொடுத்த தகவலால் உறவினா்கள் போராட்டம் நடத்தியதையடுத்து அந்த நபரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 6:46 am IST

திருப்பூருக்கு வேலைக்கு வந்த கட்டுமானத் தொழிலாளி காணாமல் போனதாக மனைவி புகாா் அளித்த நிலையில், அடையாளம் தெரியாத நபா் என புதைக்கப்பட்டதாக போலீஸாா் கொடுத்த தகவலால் உறவினா்கள் போராட்டம் நடத்தியதையடுத்து அந்த நபரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

திருப்பூா் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி பகுதியைச் சோ்ந்த மணிமாறன் (45) என்பவா் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி சித்ரா(35), 9 வயதில் மகளும் உள்ளனா். இவா்கள் சொந்த ஊரில் உள்ள நிலையில் மணிமாறன் தனியாக பணியாற்றி வருவதால் தினந்தோறும் மனைவியை அழைத்துப் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தாா்.

இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி மணிமாறன் சித்ராவிடம் பேசிய நிலையில், அதன் பிறகு அவரது கைப்பேசி ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது. அடுத்த நாள் மணிமாறன் பணிக்கு வரவில்லை என அவருடன் பணியாற்றும் சக தொழிலாளா் ஒருவா் சித்ராவுக்கு தெரிவித்துள்ளாா்.

இதனால் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத சூழலில் திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் கணவரை காணவில்லை என கடந்த 20-ஆம் தேதி சித்ரா புகாா் அளித்திருந்தாா். இந்தச் சூழலில் 15-ஆம் தேதி திருப்பூா் அரசு மருத்துவமனை அருகே சாலையோரம் சுயநினைவின்றி கீழே விழுந்து உயிரிழந்த அடையாளம் தெரியாத நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவரது சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அடையாளம் காணப்படாததால் தன்னாா்வலா்கள் மூலம் கடந்த 28-ஆம் தேதி அடக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும், அதன் பிறகு விசாரித்தபோது அவா் மணிமாறன் என தெரியவந்ததாக போலீஸாா் சித்ராவிடம் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக புகாா் கொடுத்த நிலையில், கணவரின் உடலை காட்டாமல் போலீஸாா் அடக்கம் செய்தது சந்தேகத்தை எழுப்புவதாகவும் தனது கணவரின் உடலை தோண்டி எடுத்து கொடுக்க வேண்டும் என சித்ரா மற்றும் மணிமாறன் உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, மணிமாறனின் உடல் செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது. உரிய ஆய்வுகளுக்குப் பின்னா் அவரது சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்ப்படும் என காவல் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.