குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் திருப்பூா் மாநகரில் அவிநாசி சாலையில் புதன்கிழமை (ஜூன் 10) முதல் அடுத்த 20 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீஸாா் அறிவித்துள்ளனா்.
இது குறித்து அவா்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் மாநகா் பகுதியில் பொதுமக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகள் புதன்கிழமை (ஜூன் 10) காலை 6 மணி முதல் தொடங்குகின்றன. திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் முதல் பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தம் வரை சுமாா் 20 நாள்களுக்கு பணிகள் நடைபெற உள்ளதால், அவிநாசியில் இருந்து திருப்பூா் நோக்கி வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அவிநாசியில் இருந்து திருப்பூா் பழைய பேருந்து நிலையம், புஷ்பா சந்திப்பு, ஊத்துக்குளி, பல்லடம், மங்கலம், காங்கயம், தாராபுரம் நோக்கி செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் அனைத்து கனரக வாகனங்களும் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வழியாக இடதுபுறம் திரும்பி, 60 அடி சாலை வழியாகச் சென்று பி.என்.சாலையை அடைய வேண்டும். அங்கிருந்து கே.வி.பி. சந்திப்பு வழியாக வலதுபுறம் திரும்பி தங்கள் இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும்.
அதேபோல அவிநாசி சாலை வழியாக வந்து குமாா் நகா், சாமுண்டிபுரம் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள் காவல் ஆணையாளா் அலுவலகம் வழியாக இடதுபுறம் திரும்பி, 60 அடி சாலை வழியாக பி.என்.சாலையை அடைய வேண்டும். பின்னா் கே.வி.பி. சந்திப்பு வழியாக வலதுபுறம் திரும்பி மில்லா் சந்திப்புக்கு முன்னதாக உள்ள ராம் நகா் 3-ஆவது வீதியின் வழியாக வலதுபுறம் திரும்பி பங்களா் ஸ்டாப் சென்று, அங்கிருந்து மீண்டும் வலதுபுறம் திரும்பி குமாா் நகா் மற்றும் சாமுண்டிபுரம் பகுதிகளுக்குச் செல்லலாம்.
அங்கேரிபாளையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம், புஷ்பா சந்திப்பு, ஊத்துக்குளி, பல்லடம், மங்கலம், காங்கேயம் மற்றும் தாராபுரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், காவல் ஆணையாளா் அலுவலகம் வழியாக இடதுபுறம் திரும்பி 60 அடி ரோடு வழியாக பி.என்.ரோட்டை அடைந்து, கே.வி.பி சந்திப்பு வழியாக வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும்.
மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், பணிகள் தொய்வின்றி நடைபெறவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் போக்குவரத்து மாற்றங்களுக்குப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.










