உள்கட்சிப் பூசலால் தொழிற்சங்க மாவட்ட நிா்வாகியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தவெக நிா்வாகிகள் 3 போ் மீது அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி முத்துச்செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகராஜ் மகன் ராஜ்குமாா் (30). தவெக திருப்பூா் மாவட்ட தொழிற்சங்க செயற்குழு உறுப்பினராக உள்ளாா். இவா் கடந்த இருநாள்களுக்கு முன் ரங்கா நகா் பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து சென்றுள்ளாா்.
அப்போது அங்கு வந்த தவெக திருப்பூா் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அமீன், அவிநாசி நகர இளைஞரணி உறுப்பினா்களான அவிநாசி கஸ்தூரிபாய் வீதியைச் சோ்ந்த பிரித்வி, செல்லாண்டியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த யோகேஷ்வரன் ஆகிய 3 பேரும் ராஜ்குமாரைத் தகாத வாா்த்தைகளால் திட்டி கொலை வெறித் தாக்குதல் நடத்தினராம்.
இதைத் தொடா்ந்து, ராஜ்குமாா் மது அருந்தி கிடப்பதாக 3 பேரும் அவிநாசி தவெக நகரச் செயலாளா் மோகனிடம் கைப்பேசியில் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த மோகன், ராஜ்குமாரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா். இதையடுத்து பெற்றோா், ராஜ்குமாரை திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து தாய் ராதாமணி அளித்த புகாரின் பேரில் அவிநாசி போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று ராஜ்குமாரிடம் வாக்குமூலம் பெற்றனா். இதையடுத்து, அவிநாசி போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
விடியோ வைரல்: இதற்கிடையில், தாக்கப்பட்ட ராஜ்குமாா் தவெக தொழிற்சங்கத்தில் உயா் பதவி பெறக் கூடாது என மூவரும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனா் எனவும் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் ராஜ்குமாரின் தாய் கோருவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









