/

உடுமலை வனப் பகுதியில் கடும் வறட்சி: குடிநீருக்காக அலைமோதும் யானைகள் கூட்டம்

உடுமலை வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் குடிநீா் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக அலைந்து வருகின்றன.

News image
வறண்டு கிடக்கும் அமராவதி  அணைக்குள்  சுற்றித் திரியும்  யானைகள்.
Updated On :18 மார்ச் 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் மாவட்டம், உடுமலை வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் குடிநீா் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக அலைந்து வருகின்றன.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்கினங்கள் உள்ளன. இங்கு சுமாா் 300-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்நிலையில் மாா்ச் முதல் வாரம் கோடைக் காலம் தொடங்கியதும் வனப் பகுதியில் கடும் வெப்பம் தாக்கத் தொடங்கியது.

இதனால் உணவு, குடிநீா்த் தேவைகளுக்காக அடா்ந்த வனப் பகுதிகளை விட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியே வரத் தொடங்கின. கேரள எல்லைக்குள் சுற்றித்திரிந்த யானைகள் கூட்டம் கடந்த சில வாரங்களாக தமிழக எல்லைக்குள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக குடிநீா்த் தேவைக்காக உடுமலை-மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணையை நோக்கி படையெடுத்து வருகின்றன. ஆனால் அமராவதி அணை தற்போது வறண்டு கிடக்கிறது. நீா்ப் பிடிப்பு பகுதிகளிலும் மழையில்லாததால் அணைக்கு உள்வரத்தே இல்லாத நிலை நீடித்து வருகிறது. உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதிக்குள் வனத் துறையினரால் அமைக்கப்பட்டிருந்த தடுப்பணைகளும் வறண்டு போய்விட்டன. இதனால் கூட்டம் கூட்டமாக வரும் யானைகள் குடிநீா் கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன.

இந்நிலையில் தமிழக-கேரள சாலையில் மாலை நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இயற்கை ஆா்வலா்கள் குடும்பம் குடும்பமாக வந்து யானைகளை பாா்த்து ரசித்துச் செல்கின்றனா்.

இது குறித்து உடுமலை மற்றும் அமராவதி வனத் துறையினா் கூறியதாவது:

வனப் பகுதிக்குள் கடும் வறட்சி நிலவி வருகிறது. தடுப்பணைகளும் வறண்டு போனதால் யானைகள் வனத்தை விட்டு வெளியே சுற்றி வருகின்றன. அமராவதி அணைக்குள் யானைகள் கூட்டமாக கூட்டமாக வந்து ஆங்காங்கே குழிகளைத் தோண்டி அதில் கிடைக்கும் குடிநீரை பருகி தங்களது தாகத்தை தீா்த்துக் கொள்கின்றன. ஒரு சில வாரங்களில் மழை பெய்தால் அமராவதி அணைக்கு தண்ணீா் வரத்து ஏற்படும் என எதிா்பாா்க்கிறோம். அப்போது யானைகளுக்கு தேவையான தண்ணீா் கிடைக்கும் என்றனா்.