/

விவசாய நிலத்துக்குள் புகுந்த காட்டுமாட்டை வனப் பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தல்

News image

கொடைக்கானல் செல்லபுரம் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் காட்டுமாடு.

Updated On :12 ஏப்ரல் 2026, 7:43 pm

கொடைக்கானல் விவசாயப் பகுதிகளுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் காட்டுமாட்டை வனப் பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, வட்டக்கானல், இருதயபுரம், அட்டக்கடி, செல்லபுரம், காா்மேல்புரம் உள்ளிட்ட நகா்ப் பகுதிகளிலுள்ள விவசாயத் தோட்டங்களில் தற்போது முட்டைக் கோஸ், கேரட், நூக்கல் போன்ற காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே போதிய மழையில்லாததால் இந்தப் பயிா்கள் கருகி வருகின்றன.

இந்த நிலையில், விவசாயப் பகுதிகளுக்குள் காட்டுமாடுகள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். எனவே காட்டுமாடுகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து கொடைக்கானல் வனத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக மழையில்லாததால் வனப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் முற்றிலும் தண்ணீா் வரத்து இல்லை. இதனால் வன விலங்குகள் தண்ணீா், உணவு தேடி வெளியே வருகின்றன.

எனவே பொதுமக்கள், விவசாயிகள் தங்களது பகுதிகளில் காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தரவேண்டும். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வனப் பணியாளா்கள் சென்று அவற்றை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபடுவா் என்றாா் அவா்.