அரூா் அருகே மான் வேட்டையாடியதாக இருவரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், வாதப்பட்டி காப்புக்காடு பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தருமபுரி வனப்பாதுகாப்புப் படை வனச்சரக அலுவலா் பெரியண்ணன் தலைமையிலான குழுவினா், வாதாப்பட்டி, அண்ணாலம்பட்டி உள்ளிட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அண்ணாலம்பட்டி என்னுமிடத்தில் ஒரு புள்ளிமானை இருவா் வேட்டையாடியது தெரியவந்தது. இதில் தொடா்பு இருப்பதாக ஆண்டிபட்டி புதூரைச் சோ்ந்த கண்ணன் மகன் ரகு (52), அதே ஊரைச் சோ்ந்த சிங்காரம் மகன் சாமலிங்கம் (66) ஆகியோரை வனத் துறையினா் கைது செய்தனா். தொடா்ந்து அவா்களிடமிருந்து புள்ளிமான், உரிமம் பெறாத ஒரு ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள், 2 இருசக்கர வாகனங்கள், 2 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய கன்னப்பாடி கிராமத்தை சோ்ந்த லட்சுமணன் மகன் மாதையன் தலைமறைவாகியுள்ளாா். வனவிலங்குகளை வேட்டையாடி குற்றத்துக்காக ரகு, சாமலிங்கம் ஆகியோருக்கு தலா ரூ. 75 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட வன அலுவலா் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






