திருச்செங்கோடு, ஜன.8: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தொழிற்சாலைகள் அக்கறையுடன் ஈடுபட வேண்டும் என்று சென்னை டர்போ எனர்ஜி நிறுவன துணைத் தலைவர் டாக்டர் டி.ஏ. சுப்ரமணி கூறினார்.
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் வெள்ளிக்கிழமை மாநில அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கு நடைபெற்றது. இதனைத் தொடக்கி வைத்து அவர் பேசியது:
சமுதாயத்திற்குத் தேவையான கல்விமுறையையும், பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் தொழில்நுட்பங்களையும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை அடித்தட்டு மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் கல்வி நிறுவனங்கள் ஈடுபடுவது அவசியம். புதிய தயாரிப்பு முறைகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் உருவாக்க மாணவர்கள் பாடுபட வேண்டும்.
சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் மாசுபடாமல் காப்பது நமது கடமை. எதிர்கால சந்ததிக்கு இயற்கை வளங்களைக் களங்கப்படுத்தாமல் தர வேண்டும் என்பதை மனதில் கொண்டு, அனைவரும் அக்கறையுடன் பாடுபட வேண்டும் என்றார்.
விழாவுக்கு தாளாளர் கே.எஸ். ரங்கசாமி தலைமை வகித்தார். செயலர் சீனிவாசன், முதல்வர்கள் வெங்கடேசன், குழந்தைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் ஆய்வுக்கட்டுரைகளைச் சம்ர்ப்பித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.