தருமபுரி, ஜன. 8: தருமபுரி மாவட்ட வருவாய்த்துறையினர் பிப்ரவரி 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
தருமபுரியில் சனிக்கிழமை நடந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் த.டியூக் பொன்னுராஜ் பேசியது:
காலியாக உள்ள பதிவறை எழுத்தர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
இளநிலை உதவியாளர்கள், நேரடி உதவியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். தகுதியான துணை வட்டாட்சியர்களுக்கு வட்டாட்சியர்களாக தாற்காலிக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 1 முதல் நடைபெறும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தருமபுரி மாவட்ட வருவாய்த்துறையில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார் அவர். முன்னதாக வரும் 23-ம் தேதி மதுரையில் நடைபெறும் வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் திரளாக பங்கேற்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட தலைவர் அ.நடராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சின்னபையன், இணைச் செயலர் மா.கண்ணன், மாவட்ட பொருளாளர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.