சேலம் மக்களின் எதிர்கால சுற்றுலா மையமாகும் பனைமரத்துப்பட்டி ஏரி

சேலம், ஜூன் 28: நூற்றாண்டு கண்டுள்ள சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி ஏரி சுமார் 800 கிணறுகள், 1,900 தென்னை மரங்களைக் கொண்ட செழிப்பான இடமாகும். மலைகள் சூழ்ந்த சேலம் மாவட்டத்தில் போதமலை, ஜருகுமலைகளுக்கு
Updated on
2 min read

சேலம், ஜூன் 28: நூற்றாண்டு கண்டுள்ள சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி ஏரி சுமார் 800 கிணறுகள், 1,900 தென்னை மரங்களைக் கொண்ட செழிப்பான இடமாகும். மலைகள் சூழ்ந்த சேலம் மாவட்டத்தில் போதமலை, ஜருகுமலைகளுக்கு இடையே உள்ள பனைமரத்துப்பட்டி ஏரி 2,137 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த இடம் முழுவதும் சேலம் மாநகராட்சிக்கு சொந்தமானதாகும்.

சுமார் 23 சதுர கிலோ மீட்டர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் கொண்ட இந்த ஏரியில் 356 ஏக்கர் பரப்பளவில் நீர் நிரம்பியிருக்கும். இந்த பரந்து விரிந்த ஏரியின் கரையில் திப்பம்பட்டி, வேடப்பட்டி, குரால்நத்தம், தும்பல்பட்டி, பனைமரத்துப்பட்டி, அடிமலைப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.

இந்த ஏரிக்கு வரட்டாறு, கூட்டாறு உள்ளிட்ட பல்வேறு சிற்றாறுகள், ஓடைகள் நீரை கொண்டு வரும். இருப்பினும் ஜருகுமலையில் இருந்து வரும் பிரதான கால்வாய், ஜல்லூத்துமலையில் இருந்து வரும் கூட்டாறு, போதமலையில் இருந்து வரும் வரட்டாறு ஆகியவையே அதிகளவில் நீரை கொண்டு வந்து சேர்ப்பவை. ஏரி நிரம்பும் சமயத்தில் உபரி நீர் மல்லூர் ஏரிக்குச் சென்று அங்கிருந்து பல்வேறு ஏரிகளை நிரப்பி வந்துள்ளது.

சேலம் நகராட்சியாக இருந்த காலங்களில் பனைமரத்துப்பட்டி ஏரியே சேலம் மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்துள்ளது. அங்கிருந்து கொண்டுவரப்படும் குடிநீரையே சேலம் மக்கள் பல ஆண்டுகள் பயன்படுத்தி வந்துள்ளனர். சேலம் பனைமரத்துப்பட்டி ஏரி சுற்றுலாத்தலமாகவும் படப்பிடிப்புகள் நடத்த ஏற்ற இடமாகவும் இருந்துள்ளது.

நாளடைவில் ஏரிக்குள் ஆக்கிரமிப்புகள் பெருகவே நீர் வழிப் பாதைகள் அடைக்கப்பட்டு ஏரிக்கு நீர் வரத்து தடைபட்டது. ஆக்கிரமிப்பு பகுதிகளில் வயல்கள் வடிவம் பெற்று, கிணறுகள் தோண்டப்பட்டன. தென்னை உள்ளிட்ட பல்வேறு மரங்கள், பயிர்கள் நடப்பட்டன.

இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் சுமார் 800 கிணறுகள் தோண்டப்பட்டிருந்தன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதுபோக இப்போது 142 கிணறுகள் உள்ளன. மேலும் 1,900 தென்னை மரங்களும் ஏராளமான இதரவகை பலன் தரும் மரங்களும் உள்ளன.

மேலும் ஏரிக்கு நீர் வரும் பாதைகளின் குறுக்கே வனத்துறை சார்பிலும், குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பிலும் ஏராளமான தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை அகற்றிக்கொள்ளும்படி அவர்களுக்கு முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தடுப்பணைகள் அகற்றப்பட்ட பிறகு பனைமரத்துப்பட்டி ஏரிக்கு அதிகளவில் நீர் வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை அடுத்து ரூ.25 கோடியில் ஏரியை சீரமைத்து, புதிய அணுகு சாலைகள் அமைத்து, ஏரியின் முகப்பில் நூற்றாண்டு வளைவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மரத்தாலான பாலங்கள், படகு குழாம், மீன்பிடிப்புப் பகுதிகள், நீச்சல் குளம், தங்கும் விடுதிகள், கண்காணிப்பு கோபுரங்கள், கைவினைப் பொருள்கள் விற்பனை நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இங்கு ஏற்படுத்தவும் சுற்றுப் பகுதி கிராமங்களில் மரக் கன்றுகள் நட்டு, வனப் பகுதியை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த பகுதி எதிர்காலத்தில் சேலம் மாநகர மக்களுக்கு மிகப் பெரிய சுற்றுலாத்தலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com