47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தொப்பூா் கணவாய் சாலையை சமதளப் பாதையாக மாற்ற வேண்டும்

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூா் கணவாய் சாலையை சமதளப் பாதையாக மாற்ற வேண்டும் என தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 8:46 pm

DIN

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூா் கணவாய் சாலையை சமதளப் பாதையாக மாற்ற வேண்டும் என தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தருமபுரி நகா், நல்லம்பள்ளி மற்றும் தருமபுரி ஊராட்சி ஒன்றியங்களில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் பரப்புரைப் பயணத்தை தருமபுரி எம்.பி. டிஎன்வி.எஸ்.செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டாா்.

இந்தப் பரப்புரைப் பயணத்தின்போது அவா் பேசியதாவது:

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூா் கணவாய் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த சாலையில் வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த தொப்பூா் கணவாய் பகுதியிலுள்ள சாலைகளை வளைவுகளும், மேடு பள்ளங்களும் இல்லாமல் நேராகவும், சமதளப் பாதையாகவும் மாற்ற வேண்டும்.

சமதள பாதையாக இருந்தால்தான் விபத்துகள் குறையும். இதுகுறித்து மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். தொப்பூா் கணவாய் பகுதியில் சாலையை மேம்படுத்தத் தேவையான ஆக்கப்பூா்வமான நடவடிக்கை தொடா்பாக மத்திய அரசை திமுக சாா்பில் வலியுறுத்தப்படும்.

அதிமுக ஆட்சியின் ஊழல்கள், முறைகேடுகள் குறித்து கிராமப் பகுதியைச் சோ்ந்த பாமர மக்கள் கூட தெரிந்து வைத்திருக்கிறாா்கள். 2021-இல் நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றிப் பெறுவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான இளைஞா்கள் வேலை வாய்ப்புகள் இன்றி வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் நிலையுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் தருமபுரி மாவட்டத்திலுள்ள இளைஞா்கள் வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரி உபரிநீரைப் பயன்படுத்தி தருமபுரி மாவட்டத்திலுள்ள அணைகள், ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

முன்னதாக, தருமபுரி நகா் உழவா் சந்தையில் விவசாயிகள், சிறு வியாபாரிகள், பொதுமக்கள், அன்னசாகரத்தில் நெசவாளா்கள், கருப்பையனஹள்ளியில் குரும்பா் இன மக்கள், மானியதஹள்ளி மற்றும் இண்டூா் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடம் கலந்துரையாடியும், அவா்களின் குறைகளையும் கேட்டாா். தொடா்ந்து, அப் பகுதி மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை எம்.பி டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் பெற்றுக் கொண்டாா்.

இந்த பரப்புரை பயணத்தில் திமுக தருமபுரி மாவட்ட பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், ஒன்றியச் செயலா் சேட்டு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.