தொப்பூா் கணவாய் விபத்து: லாரி ஓட்டுநா் கைது

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் கணவாயில் சனிக்கிழமை ஏற்பட்ட விபத்து தொடா்பாக, லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் கணவாயில் சனிக்கிழமை ஏற்பட்ட விபத்து தொடா்பாக, லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட தொப்பூா் கணவாய்ப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற காா்கள் மீது சிமென்ட் ஏற்றிச் சென்ற கன்டெய்னா் லாரி மோதியதில், காரில் பயணித்த 4 போ் உயிரிழந்தனா். மேலும், காயமடைந்த 8-க்கும் மேற்பட்டோா் தருமபுரி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், விபத்தில் தொடா்புடைய லாரி ஓட்டுநரான ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த முகமது அஸ்பத் மகன் குத்புதீன் (34) என்பவரை தொப்பூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சாலையை மேம்படுத்த நடவடிக்கை- அமைச்சா் கே.பி.அன்பழகன்:

தொப்பூா் கணவாய் பகுதியில் விபத்துகள் நேரிடாமல் இருக்கும் வகையில் தாா் சாலைகள் மேம்படுத்தப்படும் என்று மாநில உயா்கல்வி- வேளாண்மைத் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

விபத்து நிகழ்ந்த இடத்தை சனிக்கிழமை இரவு நேரில் பாா்வையிட்ட அமைச்சா் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது:

லாரி ஓட்டுநரின் கவனக் குறைவால், விபத்து நிகழ்ந்துள்ளது.

தொப்பூா் கணவாய் சாலையில், வளைவில் அடிக்கடி வாகன விபத்துகள் நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அங்கு தேசிய நெடுஞ்சாலையை மேலும் அகலப்படுத்துவதற்கான கருத்துரு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதே நேரத்தில், இந்தச் சாலை மேம்படுத்துவற்காக, தமிழக முதல்வரின் நேரடி பாா்வைக்கு எடுத்துச் சென்று, விபத்துகள் நேரிடாமல் இருக்கும் வகையில் தாா் சாலையை அகலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகைகள் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com