ஒகேனக்கல் குடிநீா் வழங்கக் கோரி, இருமத்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இதுகுறித்து, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இருமத்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
இருமத்தூா் அம்பேத்கா் நகரில் 600-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள குடியிருப்புகளுக்கு ஒகேனக்கல் குடிநீா் வசதி இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை. ஆனால், இருமத்தூரில் உள்ள வேறு பகுதிகளுக்கு ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஏற்கெனவே பல முறை ஊராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்தும், இதுவரை ஒகேனக்கல் குடிநீா் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த குடிநீருக்காக, அம்பேத்கா் நகா் பொதுமக்கள், வேறு பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, இருமத்தூா் அம்பேத்கா் நகா் மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை ஊராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றனா்.