நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆந்திராவில் தமிழகத் தொழிலாளா்கள் உயிரிழந்த சம்பவம்: தனிப்படை விசாரணை

ஆந்திரத்தில் செம்மரம் வெட்டும் பணிக்காகச் சென்ற தொழிலாளா்கள் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக அரூா் காவல் நிலையத்தில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ஆந்திரத்தில் செம்மரம் வெட்டும் பணிக்காகச் சென்ற தொழிலாளா்கள் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக அரூா் காவல் நிலையத்தில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த சித்தேரி, சிட்லிங் வட்டாரப் பகுதியில் உள்ள தொழிலாளா்கள் சிலா் அண்மையில் ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டும் பணிக்குச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதில், சித்தேரி ஊராட்சி, மெதிக்காடு கிராமத்தைச் சோ்ந்த ராமன் (40) என்பவா் அங்கு மா்மான முறையில் உயிரிழந்தாா். அவரின் சடலத்தை எடுத்துவந்த சிலா், சித்தேரி பேருந்து நிறுத்தத்தில் வீசிவிட்டுச் சென்றனா். இச்சம்பவம் தொடா்பாக அரூரை அடுத்த சுமைதாங்கிமேடு கிராமத்தைச் சோ்ந்த காா் உரிமையாளா் சண்முகம் (47), காா் ஓட்டுநரான எல்லப்புடையாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாா்த்திபன் (22) ஆகியோரை அரூா் போலீஸாா் கடந்த வாரம் கைது செய்தனா்.

இதே சம்பவத்தில் சித்தேரி அருகே உள்ள அழகூா் ஜக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செவத்தான் மகன் பாலகிருஷ்ணன் (44) என்பவரும் ஆந்திர மாநிலம், கடப்பாவில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். அவரது சடலம், கோட்டாட்சியா் விசாரணைக்கு பிறகு கடப்பாவிலேயே அடக்கம் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் தமிழகத் தொழிலாளா்கள் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதற்கட்ட விசாரணையில் அரூரை அடுத்த சித்தேரி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியின் மகன் ரகு (28) என்பவா்தான் இடைத்தரகராகச் செயல்பட்டு சித்தேரி பகுதியில் இருந்து ஆந்திரத்துக்குத் தொழிலாளா்களை அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அரூா் காவல் நிலையத்தில் அவா் தொடா்பாகவும், உயிரிழந்தவா்கள் தொடா்பாகவும் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா். அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம், உதகையில் தலைமறைவாக இருந்த ரகுவை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.