

கர்நாடக வனப்பகுதியில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை யானையை, மீண்டும் வனப்பகுதிக்குள் ஒகேனக்கல் வனத்துறையினர் விரட்டி அடித்தனர்.
தமிழக -கர்நாடக வனப்பகுதியில் வறட்சி நிலவும் போது யானைக் கூட்டங்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி, கிருஷ்ணகிரி மாவட்டம் பிலிகுண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம்பெயர்கின்றனர். இந்த நிலையில் கர்நாடக வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி தமிழக பகுதியான ஊட்டமலை காவிரி ஆற்றிர்க்கு திங்கள்கிழமை அதிகாலையில் ஒற்றையானை வந்துள்ளது.
இதனைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டதால், மிரண்டு கிராம பகுதிக்குள் நுழைய முற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் வனசரக அலுவலர் சேகர் மற்றும் வனக் காப்பாளர்கள் நிகழ்விடத்திற்கு சென்று தண்ணீர் தேடி வந்த ஒற்றை யானையை ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு மீண்டும் காவிரி ஆற்றினை கடக்கச் செய்து கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
ஒத்துழைப்பு தேவை: வறட்சியின் காரணமாக ஆண்டுதோறும் கோடை காலங்களில் யானைக் கூட்டங்கள் இரு மாநில வனப் பகுதிகளை இணைக்கும் ஒகேனக்கல் வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்து தண்ணீர் தேடி வனப்பகுதியில் உள்ள தடுப்பணைகள் குட்டைகளில் தண்ணீர் குடித்து வருகிறது. வனப்பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாதபோது காவிரி ஆற்றில் தண்ணீர் குடிக்க வரும்போது இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அதீத ஒலி எழுப்புவதாலும், கூட்டம் கூட்டமாக செல்வதாலும் யானைகள் மிரண்டு தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் போது சுய படம் எடுப்பது, யானையின் மீது கற்கள் எறிவது, அருகில் செல்லுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கும் போது பொதுமக்கள் வனத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஒகேனக்கல் வனசரக அலுவலர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.