பென்னாகரம்: விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்ரமணிய சிவாவின் 140 ஆவது பிறந்தநாள் விழா தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டபத்தில் தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புதன்கிழமை பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோட்டாட்சியர் கீதா ராணி கலந்துகொண்டு தியாகி சுப்ரமணிய சிவா நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சுப்பிரமணிய சிவா படத்திற்கும், நினைவு தூணிற்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), வட்டாட்சியர் சௌகத் அலி, முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா மற்றும் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.