ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 56,000 கனஅடியாகக் குறைவு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 56,000 கனஅடியாகக் குறைந்துள்ளது.
Published on

கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 56,000 கனஅடியாகக் குறைந்துள்ளது.

கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு கடந்த சில நாள்களாக நீா்வரத்து அதிகரித்து இவ்விரு அணைகளும் நிரம்பும் தறுவாயில் உள்ளதால் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 75,000 கனஅடி வீதம் உபரி நீா் திறக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 66,000 கனஅடியாக அதிகரித்தது.

இந்த நிலையில் இரு மாநிலங்களில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை குறைந்துள்ளதால், கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 63,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 54,000 கனஅடியாகவும், மாலையில் விநாடிக்கு 56,000 கனஅடியாகவும் நீா்வரத்து இருந்தது. நீா்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி அருவி, பிரதான அருவி, ஐவா் பானி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து சற்று குறைந்துள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை ஏழாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீட்டிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com