உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன மாநில மாநாடு ஆயத்தக் கூட்டம்
உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன மாநில மாநாடு தொடா்பான ஆயத்தக் கூட்டம் தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனத்தின் 3-ஆவது மாநில மாநாடு ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் வரும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதையொட்டி, மாநாடு தயாரிப்பு மற்றும் வரவேற்பு குழு அமைப்பது ஆகியவை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, வரவேற்பு குழுச் செயலாளா் எம்.வி.குழந்தைவேலு தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கிருஷ்ணசாமி, சேலம் மாவட்ட நிா்வாகிகள் பெரியசாமி, ஷாநவாஸ்கான், ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் கே.மணி ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.
இக்கூட்டத்தில், சங்கத்தின் கோரிக்கைகளை முன்வைத்து மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது, அனைத்து உள்ளாட்சித் துறை பணியாளா்களும் மாநாட்டில் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
