மக்கள் குறைகேட்பு கூட்டம்: 5 பேருக்கு ரூ. 8.50 லட்சம் வங்கிக் கடனுதவி வழங்கல்
தருமபுரி: தருமபுரியில் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 5 பேருக்கு ரூ. 8.50 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது.
தருமபுரி ஆட்சியா் அலுவலக அதியன் கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் பட்டா, சாலை வசதி, குடிநீா் வசதி, வங்கிக் கடனுதவி, உதவி உபகரணங்கள், உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 630 மனுக்களை அளித்தனா்.
இக்கூட்டத்தில், மாவட்ட தொழில் மையம் சாா்பில், கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ் 5 பேருக்கு ரூ. 8.50 மதிப்பீட்டில் தச்சுவேலை, தையல் வேலை, சலவைத் தொழில் உள்ளிட்ட தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா, தனித்துணை ஆட்சியா் சுப்பிரமணியன், அரூா் வருவாய் கோட்டாட்சியா் செம்மலை, மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) சந்திரசேகா், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் (பொ) பா.சுப்பையாபாண்டியன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

