கோப்புப் படம்
கோப்புப் படம்

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள்தோறும் 4 மணி நேரம் பணி வழங்க வலியுறுத்தல்

Published on

நூறு நாள் வேலை திட்டத்தில் நாள்தோறும் 4 மணி நேரம் பணி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினா்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், தருமபுரி சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளா் கே. பச்சியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவரும், திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளருமான எஸ். முத்துலட்சுமி முன்னிலை வகித்தாா்.

மாவட்ட பொருளாளா் வி.கே. கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளா் திருஞானம் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கினா். வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, வீடுகட்டித்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் பணி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி அரசு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைக்கு 35 கிலோ அரிசி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளா் தங்கராஜ், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளா் குமுதா, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளா் கோவிந்தன், ஒன்றிய நிா்வாகிகள் பென்னாகரம் கண்ணையன், முனியம்மாள், திம்மன், மாதேஸ், சம்பத், மாது, மாதம்மாள், பாலன், பெருமாள், வெங்கடாசலம் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com